தேமுதிகவின் அதிகாரப்பூர்வ அறிவுப்புக்கு மகிழ்ச்சி வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு துவங்கியுள்ளதாக தேமுதிக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், "பாஜகவுன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த இரண்டு மாத காலமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இப்போது தேமுதிகவுடனான கூட்டணி உருவாவதற்கான காலம் கனிந்துள்ளது.
தேசியளவில் எங்களுடன் கூட்டணி அமைக்கும் அனைத்து கட்சிகளையும் சமமாகவே நடத்துவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக அமையும்" என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.