தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண, உத்தரப் பிரதேச முன்மாதிரியை ஆளுநர் பின்பற்றலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஒருவர் உரிமை கோரினால் அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கலாம். அதன் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அவருக்கு உத்தரவிடலாம்.
ஆனால், 2 பேர் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், உத்தரப் பிரதேச முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு ஒரே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு இருவருக்கும் உத்தரவிடலாம்.
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 1998-ல் இதுபோன்ற சூழல் ஏற்பட்டது. ஜெகதாம்பிகா பால் மற்றும் கல்யாண் சிங் ஆகிய இருவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இருவருமே தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினர். அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டத்து. இதைத்தான் சிதம்பரம் மேற்கோள் காட்டி உள்ளார்.
கடந்த வாரம் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தனக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதுகுறித்து அப்போது ப.சிதம்பரம், “இந்த விவகாரத்தில் அதிமுக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜனநாயக அடிப்படையிலான முடிவை எடுக்க வேண்டும். ஏற்கெனவே எடுத்த முடிவை (முதல்வராக சசிகலா தேர்வு) பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை” என்று கூறியிருந்தார்.