தமிழகம்

மீனவர்கள் 5 பேரை விடுவிக்க நடவடிக்கை: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

செய்திப்பிரிவு

இலங்கையில் தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை மூலமாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கனரக தொழில் துறை இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி ஒற்றுமை ஓட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் பங்கேற்று ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், இலங்கையில் தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் மற்றும் அதனால் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

மோடி பிரதமராக பதவியேற்றவுடன் இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொண்டு, வெற்றி யும் பெற்றார்.

500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 5 மாத காலத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி ஒவ்வொரு பிரச் சினையையும் செயல் வடிவத்தால் தீர்த்து வைத்து வருகிறார்.

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுச் செயலரிடம் பேசியிருக்கிறேன். அம்மீனவர்களை விடுவிக்க சட்ட ரீதியாகவும், இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மறியல் போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்தி வருகின் றனர். அவர்களின் உணர்வு நியாய மானது. மீனவ பிரதிநிதிகளிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் விரும்பினால் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்திருக்கிறேன். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியையும், பாஜக ஆட்சியையும் ஒப்பிட்டு பேசக்கூடாது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு நாளும் ஆட்சியாளர்கள் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தில்லை. ஆனால் நாங்கள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி பிரதமராக பதவியேற்றவுடன் இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொண்டு, வெற்றியும் பெற்றார்.

SCROLL FOR NEXT