பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. இதை பாமக தலைவர் ஜி.கே.மணியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும்போது, சில சிறிய பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதெல்லாம் பேச்சுவார்த்தையில் தீர்க்கப்படும்.
முக்கியமான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் பேச்சு
வார்த்தை முடிந்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒருசில தொகுதிகளில் மட்டும் பிரச்சினை இருக்கிறது. அவற்றில் எந்தத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைப் பொறுத்து அந்தந்த கட்சிகளுக்கு பங்கீடு செய்யப்படும். கூட்டணியில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. யூகங்களையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக எங்கள் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்.
அதேநேரம் கூட்டணியிலுள்ள எல்லாக் கட்சிகளுக்கும் அமைச்ச
ரவையில் இடம் வழங்கப்படும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும், நரேந்திர மோடியும் முடிவு எடுத்துள்ளனர்.
தொகுதிப் பங்கீடு முடிந்ததும், பாஜக வேட்பாளர் பட்டியல் மத்திய கமிட்டிக்கு அனுப்பப்படும். அவர்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவர்.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.