தமிழகம்

அங்கீகாரமற்ற வீட்டு மனைகளைப் பத்திரப் பதிவு செய்ய மீண்டும் தடை: உயர் நீதிமன்றம் அதிரடி

ஆர்.பாலசரவணக்குமார்

தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகாரமில்லாத வீட்டு மனை களை நேற்று தொடங்கி வரும் மே 4-ம் தேதி வரை பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏராள மான விளை நிலங்கள் அங்கீகார மற்ற வீட்டு மனைகளாக மாற்றப் பட்டுள்ளதாகவும், எனவே இதற்கு தடை விதிக்கக்கோரியும் வழக் கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடைவிதித்து கடந்த 2016 செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் கடந்த மார்ச் 28-ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலு வாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக பத்திரப்பதிவு சட்டம் பிரிவு 22 ஏ-ல் அரசு கொண்டு வந் துள்ள சட்ட திருத்தத்தைப் பின்பற்றி, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறுபத்திரப்பதிவு செய்யலாம் என ஏற்கெனவே எஸ்.கே.கவுல் விதித்த தடையை தளர்த்தி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் புதிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக் குமாரசாமி, இது தொடர்பாக அரசு புதிய வரைவு விதிகளை உருவாக்கி, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ள தாக தெரிவித்தார். அப்போது இந்த வழக்கை நாளை தொடர்ந்து விசாரிப்போம் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கு விசா ரணை நேற்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.

அப்போது மனுதாரரான வழக் கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜ ராகி, ‘‘முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கடந்த செப்.9-ம் தேதியன்று பத்திரப்பதிவுக்கு தடை விதித்தது முதல், பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மார்ச் 28 ம் தேதியன்று தடையை தளர்த்தியது வரை சுமார் 4 லட்சம் பத்திரப்பதிவுகள் சட்ட விரோதமாக தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. இது உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். இது தொடர்பாக விரிவான அறிக்கை கேட்ட பத்திரப்பதிவுத்துறை தலை வரை தற்போது தமிழக அரசு இட மாற்றம் செய்துள்ளது. எனவே லஞ்சம் வாங்கிக்கொண்டு தடையை மீறி பத்திரப்பதிவு செய்த பதிவுத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மற்றொரு மனுதாரரான வழக் கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தனது வாதத்தில், ‘‘ஆந்திராவில் உள்ளது போல அங்கீகாரமற்ற வீட்டுமனை களை முறையாக வகைப்படுத்தி வரையறை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் வாதம். ஆனால், கடந்த மார்ச் 28-ம் தேதி இந்த தடையை தளர்த்தி மறுபத்திரப் பதிவுக்கு அனுமதித்து, புதிய வரைவு விதிகளை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தமிழக அரசு ஏற்கெனவே சட்டவிரோதமாக பதி யப்பட்ட அனைத்து மனைகளையும், சட்ட ரீதியாக செல்லுபடியாகும் மனைகளாக மாற்றிவிடும். இதுதான் நடக்கப்போகிறது. அதற்கு உயர் நீதிமன்றமும் அங்கீகாரம் வழங்கி யது போல் ஆகிவிடும்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘இந்த விஷயத்தில் எந்த நோக்கத்துக்காக பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப் பட்டதோ, அந்த நோக்கத்தை இதுவரை தமிழக அரசு நிறை வேற்றவில்லை. புதிதாக வரைவு விதிகளையோ, கொள்கை முடி வையோ தமிழக அரசு எடுக்காத போது, ஏன் அதுவரை மீண்டும் தடை விதிக்கக்கூடாது’’ என்றனர்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், ‘‘ஏற் கெனவே விவசாயம் பொய்த்து வறுமையில் தவிக்கும் விவசாயி களுக்கு இந்த தடை உத்தரவு மேலும் பேரிடியாகத்தான் இருக் கும். தற்போது தமிழக அரசு புதிதாக வரைவு விதிகளை உருவாக்கி யுள்ளது. இந்த விஷயத்தில் மார்ச் 28-ம் தேதி நில உரிமையாளர் களுக்கு மிகச்சிறிய நிவாரணம்தான் கிடைத்துள்ளது. ஆகவே மீண்டும் தடை விதிக்கக்கூடாது’’ என்றார்.

மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தனது வாதத்தில், ‘‘ஏற்கெனவே ஓர் அமர்வு தடை விதித்தது. மற்றொரு அமர்வு தடையை தளர்த்தியது. இப்போது நீங்கள் மீண்டும் தடை விதித்தால் அது பொதுமக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். மேலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு இப்படி மாறி, மாறி உத்தரவுகளை பிறப்பிக்கிறது என்ற எண்ணமும் ஏற்படும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த விஷயத்தில் விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. எனவே இந்த வழக்கு வரும் மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கோடை விடுமுறையில் விசாரிக்கப்படும். அதற்கு வழக்கறிஞர்கள் அனை வரும் ஒத்துழைக்க வேண்டும். அதுபோல கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தடை விதிக்கப்பட்ட பிறகு சட்ட விரோதமாக பத்திரப்பதிவு நடந்துள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு நடந்து இருந்தால் அவை செல்லாது. அது குறித்து விசாரிக்கப்படும். எனவே இந்த விஷயத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். அதா வது ஏப்.21 ம் தேதியில் (நேற்று) இருந்து வரும் மே 4-ம் தேதி வரை எந்தவொரு அங்கீகாரமற்ற மனைகளையும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

          
SCROLL FOR NEXT