தமிழகம்

பள்ளி மாணவர் கொலையில் தேடப்பட்டவர் கோவையில் கைது

செய்திப்பிரிவு

பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த தூத்துக்குடி மாவட்டம், அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த கோபால் மகன் பாஸ்கர் (13), நேற்று முன்தினம் வகுப்பறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த செல்வம் மகன் மாரீஸ்வரனை (19) பந்தல்குடி போலீஸார் 4 தனிப் படைகள் அமைத்து தேடி வந்தனர். பாஸ்கரை கொலை செய்துவிட்டு வகுப்பறையிலிருந்து வெளியேறிய மாரீஸ்வரன், பள்ளியின் சுற்றுச்சுவரில் ஏறி வெளியே குதித்து, அங்கு மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த தன்னுடன் மில்லில் பணியாற்றிய ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கெ. மகேஸ்வரனுடன் (33) சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினர் மகேஸ்வரனை நேற்று கைது செய்தனர்.

தொடர்ந்து, மகேஸ்வரனை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி செல்போன் மூலம் மாரீஸ்வரனிடம் பேச வைத்ததில், அவர் கோவையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினர் கோவைக்கு உடனடியாக விரைந்து சென்று, அங்கு உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மாரீஸ்வரனை நேற்று கைது செய்தனர்.

          
SCROLL FOR NEXT