தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழவும், கூலிப்படையினரை ஒழிக்கவும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
சட்டம் - ஒழுங்கை பொறுத்தவரை தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால் பொது அமைதி பாதுகாக்கப்படுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுத்தாலும், குற்ற நிகழ்வுகளே இல்லை என்ற நிலையை எய்த முடியாது.
மக்கள்தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாய சூழல், நகரமயமாதல் போன்றவற்றால் குற்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என்பது பொதுவான நடைமுறை. இருந்தாலும், காவல்துறையினரின் சிறப்பான பணிகளால் தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் குறைந்து வருகின்றன.
கடந்த 2010-ல் ஆயிரத்து 715 என இருந்த கொலைகள் எண்ணிக்கை, 2015-ல் ஆயிரத்து 641 என குறைந்துள்ளது. ஆதாயக் கொலை 30.07 சதவீதமும், கொள்ளை 2.97, களவு 23.22, கொலை உள்ளிட்ட சொத்து வழக்குகள் 13.60 சதவீதமும் குறைந்துள்ளன. 2010-ல் குற்ற விகிதம் 277.08 என இருந்தது. 2015-ல் 244.38 என குறைந்துவிட்டது. தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தமிழகத்தில் கூலிப்படையின் நட வடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். கொலை சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளியாகும்போது, அவை கூலிப்படையினரால் நடந்ததாக வருகின்றன. ஆனால், பெரும்பாலான சம்பவங்களில் கொலையுண்டவர்களின் எதிரிகள், உறவினர்கள், கூட்டாளிகள் அல்லது நண்பர்களே இச்செயலில் ஈடுபடுகின்றனர். பழிக்குப் பழியாக நடக்கும் சம்பவங்களில் இருதரப்புக் கும் வேண்டியவர்களே சம்பந்தப் படுகின்றனர்.
சமீபத்தில் நடந்த கொலை சம்பவங் களில் கூலிப்படையினர் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அச் சம்பவங்களில் கூலிப்படையினர் ஈடுபட வில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் கூறியதில் உண்மை இல்லை. கூலிப் படையினரை அறவே ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.