ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக தகவல் பரவியதால் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடிய அதிமுகவினர், பின்னர் ஜாமீன் மறுக்கப்பட்டது தெரிந்ததும் சோகத்தில் கதறிஅழுதனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது. தீர்ப்பை தெரிந்துகொள்ளும் ஆவலில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதாவின் வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதியில் நேற்று காலையில் இருந்தே ஏராளமான அதிமுகவினர் திரண்டிருந்தனர்.
காலையில் தொடங்கிய விசாரணை, பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டதும் எல்லாரும் பரபரப்பாக காணப்பட்டனர். பின்னர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மாலையில் தகவல் வெளியானது. இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதாக, டி.வி. சேனல்களில் செய்திகள் வெளியாயின.
இதைப் பார்த்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அமைச்சர்கள் அனைவரும் வரத் தொடங்கினர். அவர்களுக்கும் லட்டு வழங்கப்பட்டது. அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு சிலர் குடம் குடமாக பன்னீர் கலந்த நீரை ஊற்றினர்.
ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் ஆட்டம், பாட்டம் எல்லாம் நின்று அழுகையாக மாறியது. லட்டு விநியோகம் நிறுத்தப்பட்டது. அப்போதுதான் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது தெரியவந்தது. முதலில் உற்சாகமாக ஆடிப் பாடிய பெண்கள், பின்னர் ஒப்பாரி வைத்து அழத் தொடங்கினர். அமைச்சர்களும் அவசரம் அவசரமாக சோர்ந்த முகத்துடன் புறப்பட்டு சென்றனர்.
போயஸ் கார்டனிலும் முதலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய அதிமுகவினர், பின்னர் ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் சோகத்தில் மூழ்கினர்.