குடி உயிரையும், உறவையும் கெடுக்கும் என தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள சர்வகுடியைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் கார்த்திக்ராஜா (23). மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலரான இவர், ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.
புதன்கிழமை இரவு அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட இவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளாங்குடியில் வசிக்கும் அவரது சகோதரிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்து, மயங்கிய நிலையில் கிடந்த கார்த்திக்ராஜாவை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை கார்த்திக்ராஜா இறந்தார்.
தகவலறிந்த தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீஸார் கார்த்திக்ராஜாவின் வீட்டில் சோதனையிட்டபோது ஒரு கடிதம் சிக்கியது. அதில், 'எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. குடி உறவையும், உயிரையும் கெடுக்கும். எனது முடிவு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும்' என எழுதியிருந்தார். அதைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.