கோயம்பேடு நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இம்மாதம் இறுதியில் ஆய்வு நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் தற்போது, விமான நிலையம் - சின்னமலை - கோயம்பேடு, பரங்கிமலை - கோயம்பேடு வரையில் தினமும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அடுத்த கட்டமாக கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க ஓட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இப்பாதையில் மெட்ரோ ரயில் முழு அளவிலான வேகத்தில், அதாவது 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
2 மாதங்களில்
பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான அறிக்கை ரயில்வே தென் மண்டல பாதுகாப்பு ஆணையரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் வந்து ஆய்வு நடத்தவுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உறுதி அளித்துள்ளார். பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி ஒப்புதல் அளித்தவுடன், அடுத்த 2 மாதங்களில் சென்னையில் சுரங்கப் பாதையில் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.