தமிழகம்

அரசியல் சட்ட பாதுகாப்பு, மதச்சார்பற்ற ஜனநாயகம் வலியுறுத்தி ஜன. 26, 30 தேதிகளில் ‘மக்கள் இயக்கம்’

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா தகவல்

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டப் பாதுகாப்பு இயக்கமும், 30-ம் தேதி மதச்சார்பற்ற ஜனநாய கத்தை வலியுறுத்தும் இயக்கமும் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. மற்றும் நிர்வாகிகள் சென் னையில் நேற்று செய்தியாளர் களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:

டி.ராஜா:

பணமதிப்பு நீக்கம் காரணமாக நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. விவசாயம், உற்பத்தி, சேவைத் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமைப்புசாரா தொழில்களில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்தால் சாதா ரண மக்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பொருளாதாரத்துக்கு நெருக்கடி தரும் முடிவாக அமைந்துவிட்டது. ஆனாலும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

பிப்ரவரி 1-ம் தேதி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும் முடிவு குறித்தும் நாடாளுமன்றத்திலோ, அரசியல் கட்சிகளிடத்திலோ விவாதிக்கவில்லை.

ஜனநாயக அச்சுறுத்தல்

இதுபோன்ற நடவடிக்கை களால் நாடாளுமன்ற ஜனநாய கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது. எனவே, 26-ம் தேதி குடியரசு தினத்தன்று அரசியல் சட்ட பாதுகாப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

5 மாநில தேர்தல்

பாஜக ஆட்சியில் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர், சிறு பான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, மதச் சார்பற்ற ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்க 30-ம் தேதி மக்கள் இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களை இடதுசாரி கட்சி கள் ஒருங்கிணைந்து சந்திக் கின்றன.

மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன்:

ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சினையில் தமிழகத் துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மின்துறையை தனியார்மயமாக்கும் முயற்சி என்பதால்தான், ‘உதய்’ திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இப்போது, அவரால் நியமிக்கப்பட்ட அமைச் சர் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் 2 லட் சத்து 50 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் மின்துறைக்கு மேலும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் ஏற்படும். இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது துரதிர்ஷ்ட வசமானது. தமிழகத்துக்கு செய்த துரோகம்.

தேசிய நிர்வாகக் குழு உறுப் பினர் சி.மகேந்திரன்:

விவசாய உற்பத்தி இழப்பால் தற்கொலை, அதிர்ச்சி, மனஉளைச்சலால் உயிரிழந்த 126 விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம், பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT