சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே காணாமல்போன தகவல் தொழில்நுட்ப நிறுவன பெண் பொறியாளரின் உடல் அழுகிய நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் உமா மகேஸ்வரி (23), கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி தொழில் பூங்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்தார். இவர் மேடவாக்கத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தோழி ஒருவருடன் தங்கியிருந்தார்.
இவர் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தோழி, உமா மகேஸ்வரியின் தந்தை பாலசுப்பிமணியனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி, மகள் உமா மகேஸ்வரியை காணவில்லை என புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உமா மகேஸ்வரியின் உடல் சிறுசேரி தொழில் பூங்காவின் அருகில் முள் புதரில், அழுகிய நிலையில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த உடலுடன் இருந்த அடையாள அட்டையை வைத்து, அவர் உமா மகேஸ்வரிதான் என்று போலீஸார் உறுதி செய்தனர்.
இது குறித்து காவல்துறை யினரிடம் கேட்டபோது, அழுகிய நிலையில் உள்ள உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத் திருக்கிறோம். இது கொலையா என்று தற்போது முடிவு செய்ய முடியாது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்தான் முடிவு செய்ய முடியும் என்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு ஐஜி மஞ்சுநாதா, சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
தந்தை கண்ணீர் பேட்டி
உமாமகேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியன் கூறியதாவது: “உமாமகேஸ்வரி சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி யில் படித்தார். சென்னையில் பணியாற்றியபோது விடுமுறையில் அடிக்கடி வீட்டுக்கு வந்து எங்க ளுடன் சந்தோஷமாகப் பேசி விட்டு செல்வார். கடந்த 13-ம் தேதி இரவு 10.15 மணிக்கு உமாமகேஸ்வரி, நிறுவனத்தில் இருந்து பணியை முடித்துவிட்டுச் சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின், அவர் என்ன ஆனார், எங்கு சென்றார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை.
உமாமகேஸ்வரியின் நண்பர் களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணை யில் காதல் விவகாரம் என்று போலீஸார் தெரிவித்தனர். அதன் பின், காதல் விவகாரம் இல்லை என்றனர். பின்னர் என்ன காரணத் தால் அவர் மாயமானார் என்று தெரியவில்லை என்றனர். கடைசி யில், அழுகிய நிலையில் மோப்ப நாய் உதவியுடன் உடலைக் கண்டு பிடித்துவிட்டதாக கூறுகின்றனர்.
என் மகளைக் காண செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறேன். நகைக்காகவோ, பணத்துக்காகவோ என் மகளைக் கடத்திக் கொன்று இருக்க வாய்ப்பில்லை. அவள் வெறும் கவரிங் தோடு மட்டுமே அணிந்திருந்தாள். எங்களுடன் சந்தோஷமாக இருந்தாள். இப்போது எங்களை விட்டு பிரிந்து விட்டாள்” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார்
உமா மகேஸ்வரியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “பெண்ணின் கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயம் உள்ளது. அதனால் இது கொலை என்பது உறுதியாகியுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா என்பது, பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும்” என்றனர்.