தமிழகம்

பால் கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு

ப.முரளிதரன்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் சண்முகம் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 9 ரூபாயும் உயர்த்தி தரும்படி அரசிடம் கோரிக்கை வைத்து வந்தோம்.

தற்போது தமிழக அரசு பால் கொள்முதல் விலையை சற்று உயர்த்தித் தந்துள்ளது. எங்களுக்கு இத்தொகை போதுமானதாக இல்லையென்றாலும், இதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில், ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கவில்லை.

இது நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமை யாக பாதிக்கும். நாள் ஒன்றுக்கு ரூ.10 என்றால் குடும்ப பட்ஜெட்டில் ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் கூடுதல் செலவினத்தை இந்த விலை உயர்வு ஏற்படுத்தும். பால் விலை உயர்வு காரணமாக, கடைகளில் டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலை உயரும். எனவே இந்த அளவுக்கு பால் விலையை உயர்த்தி இருக்கக் கூடாது.

ஆவின் நிறுவனத்தில் நிலவும் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை சரி செய்தாலே, அந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீளும்.

இவ்வாறு சண்முகம் கூறினார்.

          
SCROLL FOR NEXT