முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்ஜாமீன் வழக்கு விசாரணையின் போது, அரசியலுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல், ஆரக்கப்பூர்வ பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என நீதிபதி கூறினார். இந்த வழக்கில் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய ஒருநாள் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தில் ரூ.2,97,90,700-யை திரும்ப தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் ஒன்றிய அதிமுக இளைஞரணி துணைச் செயலர் ஏ.சபாபதி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின் பேரில் போலீஸார் கொலை மிரட்டல், மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி விஸ்வநாதன், உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில் அரசியல் காரணங்களுக்காக என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. என் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் நான் பண மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நத்தம் விஸ்வநாதன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.70 லட்சம் வரை தான் செலவு செய்ய வேண்டும் என்றுள்ளது. ஆனால் மனுதாரர் தேர்தல் செலவுக்காக ரூ.4 கோடிக்கும் மேல் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவரது புகார் பொய்யானது என்பது தெரிகிறது. அரசியல் விரோதம் காரணமாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார்.
புகார்தாரர் சபாபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, இந்த வழக்கில் தங்களையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளோம். இதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 2014-ல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போதெல்லாமல் புகார் அளிக்காமல் இப்போது புகார் அளித்து நேரத்தை வீணடிக்கிறீர்கள். அரசியல் காரணங்களுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பின்னர், விசாரணையை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்தார். அதுவரை நத்தம் விஸ்வநாதனை கைது செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.