தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா இல்லத் திருமண விழா மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் கொலை நகரமாக மாறிவிட்டது. மதுபோதையில் பல கொலைகள் அரங்கேறுகின்றன.
சென்னையில் பெண் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ராயப்பேட்டையில் தாய் மற்றும் அவரது 3 மகள்களை மது போதையில் ஒருவர் கொலை செய்துள்ளார். சென்னையில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்றால் பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் தொடர்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் இருந்து தமிழகமும் வெளியேறும் நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.