தமிழகம்

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?- விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 45 இறந்துவிட்டன. மற்றவற்றை கடலில் கொண்டுவிடும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால் அவை உயிர் பிழைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார், மீன் வளக் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி யாளர்கள் ஜி.மேத்யூ, கே.திரவிய ராஜ், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனப்பாது காவலர் தீபக் எஸ்.பில்ஜி ஆகியோர் மணப்பாடு கடற்கரையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு:

இந்த வகை திமிங்கலங்கள் அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதன் பெயர் Globicephala Macrorhynchus. குழுவாக வசிக்கும் இவற்றுக்கு தனி சமிக்ஞை இருக்கும்.

குழுவில் உள்ள ஒரு திமிங்க லம் இரை தேடியோ, கடல் நீரோட் டத்தாலோ பிரிந்து சென்றுவிட்டால் அது சமிக்ஞை கொடுக்கும். உடனே அந்த குழுவில் உள்ள மற்றவை அப்பகுதிக்கு மொத்தமாக சென்று விடும். அவ்வாறு பிரிந்த ஒரு திமிங்கலம் மணப்பாடு கரைக்கு வந்திருக்கலாம். அதன் சமிக்ஞை கிடைத்து மற்ற திமிங்கலங்களும் கரைக்கு வந்திருக்கலாம்.

‘கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் காயம் ஏதும் இல்லை’ என்றார் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பூங்கா வன பாதுகாவலர் தீபக் எஸ்.பில்ஜி.

அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்:

இப்பகுதியில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால், அணு உலையுடன் தொடர்புபடுத்தி பேசுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மின் உற்பத்தி நடைபெற வில்லை. உற்பத்தி நடைபெற்ற போது அணுஉலையை குளிர்விக் கும் தண்ணீரின் வெப்பநிலையை குறைத்து வெளியேற்றியபோதுகூட இவ்வாறு திமிங்கலங்கள் ஒதுங்க வில்லை.

மேலும், மணப்பாடுக்கும், கூடங்குளத்துக்கும் 40 கி.மீ. தூரம் இருக்கிறது. இதற்கும், அணுமின் நிலையத்துக்கும் சம்பந்தம் கிடையாது.

இது முதல்முறை அல்ல

மணப்பாடு கடற்கரையில் திமிங்கலங்கள் மொத்தமாக கரை ஒதுங்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் 1973-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி 147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஓரிரு நாட்கள் உயிரோடு இருந்த அவை பின்னர் இறந்துவிட்டன.

அதேபோல்தான் இப்போதும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி யுள்ளன. ஒரே காலத்தில் தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

          
SCROLL FOR NEXT