வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு சில தினங்களில் தொடங்க உள்ளது. இதன் விளைவாக கர்நாடக மாநிலத்திலும் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பலனாக தமிழகம் நோக்கி குளிர்ந்த ஈரக்காற்று வீசத் தொடங்கும். அதனால் தமிழத்தில் வெப்பத்தின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யக்கூடும். வெப்பநிலையை பொருத்தவரை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.