தமிழகம்

ரூ.8 கோடி ஹெராயின் கடத்தியதாக நாகப்பட்டினம் மீனவர்கள் 6 பேர் கைது

செய்திப்பிரிவு

ரூ.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக நெடுந்தீவு அருகே நாகப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப் படுவதாக இலங்கை கடற்படை யினருக்கும், காங்கேசன்துறை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றுள்ளனர்.

அப்போது, கடலில் மீன் பிடித் துக்கொண்டு இருந்த பைபர் படகில் சோதனை செய்துள்ளனர். படகின் அடியில் 13.5 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

படகில் இருந்த மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.8 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து 6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் காங்கேசன்துறை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு போலீ ஸாரும் விசாரணை நடத்தினர்.

இலங்கை நீதிமன்றத்தில் போதைப் பொருட்கள் கடத்தியது உறுதி செய்யப்பட்டால் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனையும், அதிகபட்சம் தூக்கு தண்டனையும் விதிக்கப்படுகிறது. போதைப் பொருட்கள் கடத்திய குற்றச் சாட்டின்பேரில் கொழும்பில் உள்ள வெளிக்கடை சிறையில் ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடைக்கப்பட் டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT