நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகி வெளியில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்குகளை உடைத்தெறிந்து மீண்டு வந்து, மீண்டும் அவர் முதல்வார் ஆவார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அதிமுக அரசு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த தீபாவளி அதிமுகவினருக்கு மட்டும் அல்ல.தமிழக மக்களுக்கும் இரட்டிப்பு தீபாவளியாக அமைந்துள்ளது. அதிமுகவை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாதவர்கள் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. கச்சத் தீவை மீட்க வேண்டும் என அதிமுக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மீனவர்களை பாதுகாக்கும் பணியில் மத்திய அரசும் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் ஊழல் பற்றி பேசி வருபவர்கள் மிகப் பெரிய ஊழல் புரிந்தவர்கள் என நாட்டு மக்களுக்கும் தெரியும். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என பேசி வருகின்றனர். அப்படி ஒரு கூட்டணி அமையுமா என்பதே இப்போது கூற முடியாது. அவர்களுக்குள் யார் முதல்வர் என இப்போதே பிரச்னை நடந்து வருகிறது.
தமிழக ஆளுநரை கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார். இதற்காக மத்திய அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் நடித்த கத்தி திரைப்படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தொடர்புடைய நிறுவனம் தயாரித்ததாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒரு திரைப்படத்தை தயாரித்து, இயக்குவது மிகவும் கடினமான விஷயம். இந்த பிரச்சினையில் பேசி தீர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.” என்றார்.