இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டிடிவி தினகரன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் மொத்தம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரிய அளவிலான பணப்பரி மாற்றம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தால் அது குறித்த தகவல்களை வருமான வரித்துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் அனுப்புவது போலீஸா ரின் வழக்கம். தினகரன் மீதான வழக்கில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், டெல்லி அமலாக்கத்துறைக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தினகரன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம்(பெரா சட்டம்) செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.
தினகரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவ ரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை விசாரணை நடத்தவில்லை. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி தினகரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதனால் தினகரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி, டெல்லி வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிவில் தினகரனை கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்ட தொழில் அதிபர் சேகர் ரெட்டி ஜாமீனில் வெளிவந்ததும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அதைப்போலவே டிடிவி.தினகரனையும் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க வாய்ப்பிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினகரன் மீது ஏற்கனவே 2 சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.