தமிழகம்

நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வந்தது கொல்கத்தா போலீஸ்

செய்திப்பிரிவு

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனை கைது செய்வதற்கக கொல்கத்தா போலீஸார் சென்னை வந்தடைந்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று சென்னை வந்த நீதிபதி கர்ணன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். நேற்றிரவே அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் டெல்லி செல்லவில்லை.

அவர் தற்போது கடலூரில் குல தெய்வம் கோயிலுக்குச் சென்றிருப்பதாக அவரது உறவினர் தரப்பு தெரிவித்துள்ளது. கர்ணன் எந்த நேரத்திலும் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீஸார் சென்னை வந்துள்ளனர். சென்னை விருந்தினர் மாளிகைக்கு வந்த கொல்கத்தா போலீஸார் நீதிபதி கர்ணன் அங்கு இல்லாததால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். தற்போது எழும்பூரில் உள்ள போலீஸ் ஆஃபீசர்ஸ் மெஸ்ஸில் அவர்கள் முகாமிட்டுள்ளனர்.

படம்: எல்.சீனிவாசன்

SCROLL FOR NEXT