திருச்சி பெல் நிறுவனம், 3 தேசிய பாதுகாப்பு விருதுகள் மற்றும் 12 விஸ்வகர்மா தேசிய விருதுகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
மிகச்சிறந்த பாதுகாப்பு செயல்பாடுகளை நடை முறைப்படுத்தும் தொழிலக நிர்வாகம் மற்றும் ஊழியர்களைச் சிறப்பிக்க, மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தால் தேசிய பாதுகாப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.
மத்திய தொழிலாளர் துறை சார்பில் டெல்லியில் அண்மை யில் நடைபெற்ற விழாவில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இந்த விருதுகளை திருச்சி பெல் அதிகாரிகளுக்கு வழங்கிப் பாராட்டினார்.
பெல் குழுமத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல் சோப்தி, பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் சுப்ரதா பிஸ்வாஸ், திருச்சி பெல் பொது மேலாளர் (பொறுப்பு) ஆர்.ராஜாமனோகர் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
ஆற்றல் முறைமைகள் குழு மனித ஆற்றல் நேரப் பிரிவில் மிக நீண்ட விபத்தில்லா காலகட்டம் மற்றும் மிகக் குறைவான விபத்து சராசரி ஆகிய அளவீடுகளுக்காக ஒரு தேசிய விருதும், பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழகத்துக்கு இதே பிரிவில் மிக நீண்ட விபத்தில்லா காலத்துக்கான இரண்டாமிடத்துக்கான ஒரு தேசிய விருதும், இணைப்பில்லா எஃகு குழாய் ஆலை ஒரு மில்லியன் மனித ஆற்றல் நேரப் பிரிவில் மிகக் குறைவான விபத்து சராசரிக்காக ஒரு விருதையும் திருச்சி பெல் நிறுவனம் பெற்றுள்ளது.
இதேபோன்று, கொதிகலன் உற்பத்திப் பிரிவின் தொழில் வினை ஞர்கள் மகுமஞ்சல யரகொர்லா, டி.விஜயகுமார், ஈ.வினோத்குமார், டி.குணசேகரன் ஆகியோர், உலோ கக் கலவைக் குழாய்களின் பற்றிணைப்பில் ஆர்கன் வாயு கொண்டு கழிவு நீக்கும் அமைப்பை மேம்படுத்தியதற்காக விஸ்வகர்மா தேசிய விருதையும், ரூ.75,000 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களையும் பெற்றனர்.
வால்வுகள் உற்பத்திப் பிரிவின் தொழில் வினைஞர்கள் எம்.பாலமுருகன், பி.அக்பர் அலி, எம்.ஈஸ்வரன், ஏ.கங்கேஸ்வரன் ஆகியோர், உயரழுத்த வால்வுக ளில் ஏற்படும் கசிவுகளை நீக்க புதிய வழிமுறையைக் கண்டறிந்த மைக்காக விஸ்வகர்மா தேசிய விருதையும், ரூ.50,000 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களையும் பெற்றனர். பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழகத்தின் தொழில் வினைஞர்கள் வீ.நாராயண ஆச்சாரி, எல்.சிவா, எஸ்.கண்ணன் மற்றும் ஈ.ராமச்சந்திரன் ஆகியோர், ஐ.பி. சுழலித் தண்டை மறுசீரமைக்க உதவும் பொருத்தியை வடிவமைத்தமைக்காக விஸ்வகர்மா தேசிய விருது, ரூ.25,000 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களைப் பெற்றனர்.