சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பாண்டு கோடைக்காலம் எதிர்பாராதவாறு நீடித்ததால் மின் தேவையும் அதிகரித்துள்ளது. அதேநேரம் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதனால் சில நேரங்களில் மின்னழுத்த குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதை கருத்தில்கொண்டு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் தற்போது மின் தொகுப்பின் நிலைமை சீராக உள்ளது.
மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் மின் தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனே பணிகள் மேற்கொண்டு மின்விநியோகம் சரிசெய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், பொதுமக்கள் நலன்கருதி வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களில் சீரான மற்றும் தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்ய மின்வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.