தங்கராஜ், அமுதா

 
தமிழகம்

தமிழகத்தில் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் செப்.5-ம் தேதி வழங்குகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 48 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெறும் ஆசிரியர்கள் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அதில் தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ், மதுரை திருப்பரங்குன்றம் பிஎம் கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.அமுதா ஆகிய இருவர் விருதுக்குத் தேர்வாகி உள்ளனர்.

டெல்லியில் செப்.5-ம் தேதி நடைபெற உள்ள விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிப்பார். நல்லாசிரியர் விருதுடன் சான்றிதழ், தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

விருதுக்குத் தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் தங்களது அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும்மாணவர் நலனில் கொண்டஅக்கறைக்குக் கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழகத்தின் கல்விச் சிறப்புக்கும், ஆசிரிய சமூகத்துக்கும் மேலும் பெருமை சேர்க்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ விருது பெற்ற ஆசிரியர்: மாணவர் நலனில் அக்கறை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விப் பணியாற்றும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களைக் கவுரவித்து நமது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள ஆசிரியர் தங்கராஜ், கடந்த 2020-ல் அன்பாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT