சென்னை: சென்னை ஐ.சி.எஃப்-பில் தயாரிக்கப்பட்ட 2 அம்ரித் பாரத் ரயில்கள் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களை தமிழகத்துக்குள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஐ.சி.எஃப்-பில் தற்போது வந்தேபாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்ளிட்ட ரயில் வகைகள் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றன. வந்தேபாரத்துக்கு இணையான வேகமும் பாதுகாப்பும் கொண்ட, அம்ரித் பாரத் ரயில் ‘புஸ் புல்’ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயிலின் இருபுறமும் இன்ஜின் கொண்டு இயக்கப்படுவதால் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணிக்கும் வகையில் 12 முன்பதிவு பெட்டிகள் உட்பட 22 எல்.எச்.பி. பெட்டிகள் இருக்கும்.
இந்நிலையில், ஐ.சி.எஃப்.-பில் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட, 2 அம்ரித் பாரத் ரயில்கள் தெற்கு ரயில்வேக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களை தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கும், கோவை வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: நாடு முழுவதும் தற்போது, 30 வழித்தடங்களில், 60 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தேபாரத் ரயிலுக்கு இணையான வேகமும், வசதியுடன் இந்த வகையில் 2 புதிய ரயில்கள் தெற்கு ரயில்வேயிடம் வழங்கப்பட்டுள்ளன.
12 முன்பதிவு பெட்டிகள் கொண்ட இந்த ரயில்களில், ‘ஏசி’ பெட்டிகள் இருக்காது. இதனால், சாதாரண முன்பதிவு கட்டணத்தில், அதிகமான பயணிகள் பயணிக்க முடியும். இந்த புதிய ரயில்களை தமிழகத்துக்குள் இயக்க, ரயில்வேயிடம் பரிந்துரை செய்யப்படும்.
மேலும், அம்ரித் பாரத் வகை ரயில்களில், கணிசமான அளவுக்கு ‘ஏசி’ பெட்டிகள் மற்றும் கூடுதல் வசதியுடன், மேம்படுத்தப்பட்ட புதிய வகை பெட்டிகள் ஐ.சி.எஃப்.-பில் தயாரிக்கப்படுகிறது. தரை, இருக்கை மற்றும் படுக்கை ரெக்சின், சிற்றுண்டி மேசைகள், திரைச்சீலைகள் என பயணிகளை கவரும் வகையில் உள்அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வகை ரயில்களையும், விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.