'ரோஜ்கர் மேளா' நிகழ்ச்சி ஐசிஎஃப். அம்பேத்கர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஐசிஎஃப் பொது மேலாளர் சுப்பாராவ், ஐசிஎஃப் முதன்னை தலைமை பணியாளர் நலன் துறை அதிகாரி ஜெகதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: 19-வது ‘ரோஜ்கார் மேளா’ நாடு முழுவதும் 47 இடங்களில் நேற்று நடைபெற்றது. இதில் 51 ஆயிரம் பேருக்கு, காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்.
சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு, ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை, தெற்கு ரயில்வே, பரோடா வங்கி, அஞ்சல் துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட அரசு பணிகளுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த 65 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழியை பிரதமர் மோடி வழங்கியிருந்தார். அதன்படி, ஓராண்டில் அந்த இலக்கைத் தாண்டி, மொத்தம் 12 லட்சம் பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
140 கோடி மக்கள் வாழும் இந்தத் தேசத்தை நிர்வகிக்கின்ற மற்றும் கட்டமைக்கின்ற மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. இதனை ஒரு கடமையாகக் கருதி செயல்பட்டு, 2047-க்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய ரயில்வே துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. 2027-ம் ஆண்டில் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும். சென்னை -பெங்களூரு அதிவிரைவு ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில்,சென்னை ஐசிஎஃப் பொது மேலாளர் சுப்பாராவ், முதன்மை தலைமை பணியாளர் அதிகாரி ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.