இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கொழும்பில் இன்று இருநாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண டெல்லியில் கடந்த நவம்பர் 2-ம் தேதி இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நவம்பர் 5-ம் தேதி இந்திய, இலங்கை அமைச்சர்கள் நிலையிலான உயர்நிலைக் கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டங்களில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீன்வளம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசி முடிவு செய்ய கூட்டு செயல்திட்டக் குழு (Joint working group on Fisheries) கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், இருநாட்டு மீன்வளத் துறை அமைச்சர்கள் கூட்டத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறையும் கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டங்களில் இருநாட்டு வெளி யுறவு அமைச்சகங்கள், கடற்படை, கடலோரக் காவல் படை பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும், இதன் முதல் கூட்டம் கொழும்பில் ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இரு நாட்டு அமைச்சர் கள் நிலையிலான கூட்டு செயல் திட்டக் குழு கூட்டம் கொழும்பில் இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதில் மத்திய மீன் வளம், வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இரு நாடுகளிலும் கைது செய்யப் படும் மீனவர்களை கையாளுவது குறித்த வழிமுறைகள், இந்திய, இலங்கை கடற்படையினரால் கைப் பற்றப்பட்டுள்ள படகுகளை விடுவிப் பது, இரு நாட்டு மீனவர்களும் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழி லில் கூட்டாக ஈடுபடுவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.