தமிழகம்

சென்னை அருகே புதிதாக தொடங்கப்படவுள்ள அரசு கலை கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் தொடங்கப்படவுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படிப்புகளில் சேர மாணவர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தாலுகா பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய திட்டப்பகுதியில் நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படவுள்ளது.

இங்கு பிஏ (தமிழ்), பிஏ (ஆங்கிலம்), பிஎஸ்சி (கணிதம்), பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பிகாம் ஆகிய பாடப்பிரிவுகள் வழங்கப்படவுள்ளன. இதில் சேர பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவங்களை 8-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய திட்ட குடியிருப்பில் (சி பிளாக், பிளாட் எண் 21) பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.25. பதிவு கட்டணம் ரூ.2 (மொத்தம் ரூ.27). பணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT