நாட்டில் கல்வி, சலுகைகளை போராடிப் பெறும் நிலைதான் உள்ளதாக நடிகர் ரோகிணி வேதனை தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் 15-வது மாநில மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சியாக பிரதிநிதிகள் மாநாடு திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகர் ரோகிணி பேசியதாவது: சினிமாவைத் தாண்டி சமூகத்தை பார்த்து சில உண்மையான காரியங்களை மேற்கொண்டு வருகிறேன். சினிமா மட்டுமே எனது வாழ்க்கை இல்லை. அதையும் தாண்டி சமூகத்தின் பார்வைக்கு என்னைக் கொண்டு சென்றது இதைப் போன்ற மாநாடுகள்தான். நாம் கற்றுக்கொள்ள இந்த மேடையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
சென்னையில் வெள்ளம் வந்தபோது பலரும் களமிறங்கி உதவி செய்தனர். மழை தொடங்கியபோதே, என்னை அழைத்து கைகோர்த்துச் செயல்பட்டது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். எப்படியும் அந்தப் பேரிடரில் இருந்து, நாம் மீண்டு விடுவோம் என நம்பிக்கை வந்தது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியிடங் களில் இளைஞர்களாகிய நீங்கள் அமர வேண்டும். இப்போதும், சில நல்ல அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின் றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்றவேண்டும். கல்வி, சலுகைகள் என ஒவ்வொரு விஷயத் தையும் போராடிப் பெறும் சூழல்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செ. முத்துக்கண்ணன் கொடி யேற்றினார். கே. பாலபாரதி எம்எல்ஏ வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஆர். வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் எஸ். பாலா வரவு - செலவு அறிக்கை வாசித்தார். மாநில துணைத் தலைவர் எம். செந்தில் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைச்சங்க கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் அவாய் முகர்ஜி ஆகியோர் பேசினர்.
ஏஐஒய்எப் மாநிலச் செயலாளர் வ.பாலமுருகன், எஸ்எப்ஐ. மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.