தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 147 லைட் ஏடி ரெஜிமெண்ட் ராணுவ வீரர், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், தேப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் மணிவண்ணன் 3.6.2017 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் மணிவண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.