தமிழ்நாட்டில் மேலும் 11 மாவட்டங்களில் அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்வதற்கு வசதியாக மத்திய அரசு நாடெங்கும் 149 அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முதல்கட்டமாக ஏற்கெனவே 86 அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களைத் திறந்துள்ளது. இந்நிலையில், நாடு முழு வதும் கூடுதலாக அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் கடலூர், திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், விழுப் புரம், விருதுநகர், கன்னியாகுமாரி (வடக்கு) ஆகிய 11 மாவட்டங்களில் இந்த அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படுகின்றன. அதேபோல், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படுகிறது.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.