தமிழகம்

தேவாரம் பாட எதிர்ப்பு தெரிவிக்க கூடாது

செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட தீ்ட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என சிவனடியார் ஆறுமுகசாமி கூறியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியதை எதிர்த்து, தீட்சிதர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராக தமிழக அரசு சார்பில் வழக்கறிஞரை நியமிக்கவேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு பொது நல அமைப்புகள் மற்றும் சிவனடியார் ஆறுமுக சாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை நடராஜர் கோயிலுக்குள் சென்ற ஆறுமுகசாமி, சிற்சபை முன் நின்றவாறு தேவாரம் பாடத் தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து சிதம்பரம் டி.எஸ்.பி. ராஜாராமன் தலைமையிலான போலீசார் ஆறுமுகசாமிக்குப் பாதுகாப்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆறுமுகசாமி நிருபர்களிடம் கூறியதாவது, ’’நடராஜர் கோயில் வழக்குத் தொடர்பாக அரசு தீட்சிதர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்துவருவது கண்டனத்துக்கு உரியது. இந்தக் கோயில் தமிழ் மக்களின் சொத்து. எனவே தமிழக அரசு மூத்த வழக்கறிஞரை நியமித்து கோயிலை காக்கவேண்டும். இல்லையெனில் உயிர்மூச்சிருக்கும் வரை தேவாரம், திருவாசகம் பாடியே உயிர் துறப்பேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT