கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சென்ற லாரியை கடத்தி ஓட்டுநர்களை கொன்ற சம்பவத்தில் மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து குஜராத்துக்கு தாமிரத் தகடுகள் ஏற்றிச் சென்ற லாரியை கடந்த மாதம் 19-ம் தேதி சூளகிரி பகுதியில் மர்ம கும்பல் கடத்தியது. பின்னர் லாரி ஓட்டுநர்கள் இருவரை ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே கொலை செய்து வீசிச் சென்றது.
இது தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த 3 பேரை ஏற்கெனவே போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் ஆந்திர மாநில மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த ஜனார்த்தனன் (32), சரத்குமார் (23), முரளி (23) என்பது தெரிய வந்தது. இவர்கள்தான் கடத்தப் பட்ட லாரியில் இருந்த தாமிரத் தகடுகளை மற்றொரு லாரிக்கு மாற்றி எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தவர்கள் என்பதும் விசா ரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று திருப்பதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (34), வெங்கட்ரமணா (38) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இதன்படி 5 பேரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.