ஏற்காட்டுக்கு வாகனங்களில் செல்பவர்கள் மலைப்பாதையில் உணவுப் பொருட்களை வீசிச்செல்வதால் அவற்றை எடுக்கச் செல்லும்போது குரங்குகள், அடுத்தடுத்து வரும் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல் கின்றனர். மேலும், இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றில் அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். வாகனங் களில் வந்து செல்பவர்கள் மலைப்பாதையில் வலம் வரும் குரங்குகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனர். இவற்றை எடுக்க குரங்குகள் போட்டிபோட்டுக் கொண்டு சாலையில் ஓடிவருகின்றன. இதுபோன்ற நேரங்களில் சாலைகளில் வரும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:
பொதுவாக காடுகளில் வசிக்கும் குரங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினங்களுக்கும் மனிதர்கள் உணவு கொடுக்கக்கூடாது. காடுகளில் கிடைக்கும் உணவுகளை தாமாகவே தேடி உண்ணுவதுதான் வன விலங்குகளின் இயல்பு. இந்த இயல்பான பழக்கத்தை மறந்தால், அவை உணவு கிடைக்காமல் உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப்படலாம். மேலும், இயற்கையாக கிடைக்கும் உணவுதான் வன விலங்குகளின் உடல் நலனுக்கு உகந்தது.
எனவே, வன விலங்குகளுக்கு பொதுமக்கள் உணவுப்பொருள் எதையும் வழங்கக்கூடாது என வனத்துறையில் தடை சட்டம் உள்ளது. ஆனால், இந்த தடையை அமல்படுத்துவதில் வனத்துறை அக்கறை காட்டுவதில்லை.
இதனால், காட்டில் வாழ வேண் டிய குரங்குகள், மனிதர்கள் தரும் உணவுக்காக சாலையோரங்களில் வசிப்பதோடு அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. இதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் கூறியதாவது:
குரங்குகள் மீது பரிதாபப்பட்டு பலர் உணவுப் பொருட்களை கொடுக்கின்றனர். ஆனால், இது மிகவும் தவறானது. மக்கள் உணவுப் பண்டங்களை கொடுப்பதை நிறுத்தி விட்டால் குரங்குகள் உணவைத் தேடி காட்டின் உள்பகுதிக்குச் சென்றுவிடும். இதுகுறித்து அவ்வப் போது துண்டு பிரசுரங்களை விநியோகித்து, மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தற்போது, ஏற்காடு மலைப்பாதையில் அதிகளவில் விழிப்புணர்வு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் பங்கேற் கலாம். வனத்துறையினர் மலைப் பாதையில் ரோந்து சென்று, குரங்குகளுக்கு உணவுப் பண்டங்களை வழங்கக்கூடாது என எச்சரிக்கை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எச்சரிக்கையை மீறி செயல்படு பவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.