மக்களவையில் அறிமுகம் செய்யப்பட் டுள்ள சட்ட முன்வடிவில், ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
சட்டப்பேரவையில் நேற்று இது தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டுவந்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டாலும் பல்வேறு மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு. நீண்ட நெடிய பாரம்பரியம், நாகரிகம், கலாச்சாரம் கொண்ட தமிழ் மொழியின் மீதும் தமிழகத்தின் மீதும் உணர்வுப்பூர் வமான பற்று கொண்டவர்கள் தமிழர்கள் . தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பகுதி தமிழ்நாடு என்றே பன்னெடுங்கா லமாக விளங்கி வருகிறது.
ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத் திலும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் ‘மெட்ராஸ் மாநிலம்’ என்றே தமிழ்நாடு வழங்கப்பட்டது. இதை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர் நீத்தார். மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற் றக்கோரி 1967-ல் அன்றைய முதல்வர் அண்ணா, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன் அடிப்படையில் 1968-ல் நாடாளுமன்றத் தில் சட்டம் கொண்டு வரப்பட்டு 1969-ம் ஆண்டு ஜனவரி 14 முதல் நமது மாநிலம் ‘தமிழ்நாடு’ என வழங்கப்படுகிறது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விக்டோரியா மகாராணியால் வெளியிடப்பட்ட சாசனத்தின் அடிப்படையில் 1862-ல் ‘மெட்ராஸ் உயர் நீதிமன்றம்’ உருவாக்கப்பட்டது. இது அன்றைய மெட்ராஸ் மாநிலம், அதாவது ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. அதனால், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என பெயரிடப்பட்டது.
1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஏற்படுத்தப்பட்ட உயர் நீதிமன்றங்களுக்கு அந்தந்த மாநிலங் களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.
1996-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி மெட்ராஸ் மாநகரத்தின் பெயர் ‘சென்னை மாநகரம்’ என பெயர் மாற் றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றக்கோரி 1997-ல் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றம் செய்வதற்கான சட்ட முன்வடிவு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப் பட்ட நாளில் இருந்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பது சென்னை உயர் நீதிமன்றம் என வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள இந்த உயர் நீதிமன்றம் சென்னைக்கு மட்டுமல் லாது தமிழகம் முழுவதுக்குமான உயர் நீதிமன்றமாகும். மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளையை சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை என்பதைவிட தமிழ் நாடு உயர் நீதிமன்றத்தின் கிளை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத் துக்கு தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயரிடுவதே பொருத்தமாகும். எனவே, மத்திய அரசு தாக்கல் செய் துள்ள சட்டமுன்வடிவில் மாற்றங்கள் செய்து ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்பதற்குப் பதிலாக ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசை இந்த மாமன்றம் கேட்டுக் கொள்கிறது. இந்த தீர் மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பேரவைத் தலைவர் பி.தன பால் ஆகியோர் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்துப் பேசினர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமன தாக நிறைவேறியது.
பிரதமருக்கு கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில், மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சட்டமுன்வடிவில் ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாடு உயர் நீதின்றம்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, சட்டமுன்வடிவில் மாற்றங்கள் செய்து தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தனது கடிதத்துடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் ஜெயலலிதா இணைத்துள்ளார்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட முன்வடிவில் ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்பதற்குப் பதில் ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என மாற்றம் செய்ய மத்திய அரசைக் கேட்டுக் கொண்டு, தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகிறார் முதல்வர் ஜெயலலிதா.