தமிழகம்

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தான் சுவாதி கொலை வழக்கில் தமிழக போலீஸ் தீவிரம் காட்டியது: விஜயகாந்த் பேச்சு

செய்திப்பிரிவு

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தான் சுவாதி கொலை வழக்கில் தமிழக போலீஸ் தீவிரம் காட்டியது. பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக சார்பில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை தமிழக காவல்துறையினர் பிடித்து விட்டதால், முதல்வர் ஜெயலலிதா காவல்துறைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவரையில் எத்தனை கொலை, குற்றசம்பவங்கள் நடந்துள்ளன. இதில், குற்றவாளிகளை யாரையாவது காவல்துறையினர் பிடித்துள்ளனரா?

திருச்சியில் ராம்ஜெயம் கொலை வழக்கு, காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை சம்பவம் இதுபோன்ற வழக்குகள் என்ன ஆனது? இதையடுத்து, நீதிமன்றம் தலையிட்டதால், தற்போது விஷ்ணுபிரியா வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சுவாதியின் கொலை வழக்கிலும் நீதிமன்றத்தின் உத்தரவால் தான் தமிழக காவல்துறை இந்த வழக்கில் தீவிர காட்டியது.

பெண்களை கேலிச்சித்திரம் செய்து இணையதளங்களில் வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, துணை செயலாளர் ஜாகீர்உசேன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT