தமிழகம்

முன்பதிவு செய்தும் கட்டணம் வசூல்: பேருந்து பயணிக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் மன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை அம்பத்தூரை சேர்ந்த கே.குணசேகரன் சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலியிருந்து கடந்த ஆண்டு மே 28-ம் தேதி பேருந்தில் சென்னை வருவதற்காக இணையதளத்தில் முன்பதிவு செய்திருந்தேன். எனக்கு ஒன்றாம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. பயண தேதியன்று நான் பேருந்தில் அமர்ந்திருந்தபோது வந்த ஒரு தம்பதியினர் தங்களுக்கு 1 மற்றும் 2-ம் எண் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டபோது, பயணிகள் பட்டியலில் எனது பெயர் இல்லை என்று என்று அவர் தெரிவித்தார். மேலும், நான் அதே பேருந்தில் வேறு இருக்கையில் அமர்ந்து பயணிக்க வேண்டுமானால் ரூ.950 செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் என்னிடம் தெரிவித்தார்.

இதனால் முறையான டிக்கெட் இருந்தும் கட்டாய மாக இரண்டாவது முறையும் ரூ.950 செலுத்தவேண்டி வந்தது. சேவை குறைபாடு, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வும், பயண கட்டணத்தை திருப்பி அளிக்கவும் உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் டி.கலையரசி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மனுதாரரின் வங்கிக் கணக்கு விவரம் மூலம் அவர் முன்பதிவு செய்தது உறுதியாகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து நிறுவனம் ஒரு முறை பயணத்துக்காக இரண்டுமுறை கட்டணம் வசூலித்ததோடு, கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்கவில்லை. அந்த நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளதால், பயண கட்டணம் ரூ.950-ஐ திருப்பி அளிக்க வேண்டும். மேலும், மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10,000 மற்றும் வழக்கு செலவாக ரூ.5,000-த்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT