ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையொட்டி தமிழக மக்கள் சார்பாக தான் முன்வைத்த 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் ஒரு புரட்சியாக உருவெடுத்து வெற்றியை ஈட்டியது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு தமிழன் என்ற முறையில் இந்தப் புரட்சியில் மக்களில் ஒருவனாக பங்கெடுத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.
அதேநேரத்தில், அறவழிப் போராட்டத்தின் இறுதி கட்டத்தில் வன்முறை வெடித்தது துரதிர்ஷ்டவசமானது. அது குறித்து, தொடர்ந்து என் கவலையைப் பகிர்ந்து வந்ததுடன், முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பாக 3 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தேன்.
‘மீனவர்கள், மாணவர்கள் என பலரை கைது செய்துள்ளீர்கள். அத்தனை பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்; வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைத்தே ஆகவேண்டும்; அரசாங்கமே ஒரு நாளைத் தேர்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்தலாம் என சொல்ல வேண்டும்' என்பதே அந்தக் கோரிக்கைகள்.
இந்த நிலையில், சென்னை நடுக்குப்பத்தில் ரூ.70 லட்சத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும். கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அவர்களோடு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வோம் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதை வரவேற்பதுடன், தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்ததற்காக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேபோல், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதியையும் முதல்வருடன் ஆலோசித்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதும் தமிழர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.