தமிழகம்

பொறியியலுக்கு இணையான எம்.எஸ்சி. பட்ட மேற்படிப்புகள்

ஜெயபிரகாஷ் காந்தி

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசைக் கனவு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. பிளஸ் 2 வகுப்பில் மதிப்பெண் சற்றே குறைவாக எடுத்தவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்கும் விதமாக, பொறியியலுக்கு இணையான எம்.எஸ்சி. இன்டகிரேட்டட் புரோகிராம் பட்டமேற்படிப்புகள் உள்ளன. இதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் கலந்தாய்வு இதற்குப் பொருந்தாது. எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் டெக்னாலஜி, எம்.எஸ்சி. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பட்டமேற்படிப்புகள் உள்ளன. பிளஸ் 2-வில் கணிதம், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவு எடுத்து படித்தவர்கள் இதில் சேர முடியும்.

இந்த ஐந்தாண்டு பட்டமேற்படிப்பை படித்து முடித்தவர்கள், பொறியியல் மாணவர்களுக்கு நிகராக தொழில்நுட்பத் துறைகளில் 90 சதவீத பணி வாய்ப்பு பெறுகின்றனர். சுயநிதிப் பிரிவில் படிக்கவேண்டி உள்ளதால், இம்மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.22 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். இப்படிப்புக்கான சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.

கல்லூரியில் படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியில் சேர்ந்துகொள்வது நல்லது. எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் டெக்னாலஜி மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி முடித்தவர்கள் ஆசிரியர் பணியிடத்துக்கு செல்வது கடினம் என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

பி.இ., எம்.டெக். முடித்தவர்களுக்கே ஆசிரியர் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று AICTE (ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன்) விதிமுறைகள் வலியுறுத்துகின்றன. எனவே,எம்.எஸ்சி., எம்.டெக். முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பது அரிதான விஷயம்.

இதேபோன்று, ஐந்தாண்டு படிக்கக்கூடிய எம்.எஸ்சி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் பட்டமேற்படிப்பை வி.ஐ.டி., எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. சில பொறியியல் கல்லூரிகள் எம்.எஸ்சி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பை வழங்கிவந்தன. கடந்த ஆண்டிலிருந்து AICTE கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாக, இப்படிப்பு வழங்குவதை கல்லூரிகள் நிறுத்திக்கொண்டுள்ளன.

‘AICTE வழிகாட்டுதல் மட்டுமே வழங்க வேண்டும். நிபந்தனைகள் விதிக்கக் கூடாது’ என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, பிரபலமான பல கல்லூரிகள் எம்.எஸ்சி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பை மீண்டும் தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எம்.எஸ்சி. முடித்த பிறகு, எம்.பி.ஏ. படிப்பதன்மூலமும் நல்ல பணிகளில் சேர முடியும்.

ஐ.டி. துறையின் அசுர வளர்ச்சி காரணமாக ஆண்டுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை பணியில் சேர்கின்றனர். பொறியியல் மாணவர்களுக்கு இணையாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் முடித்தவர்களுக்கும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர பொறியியல் படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 197.5 என்றும் எம்.எஸ்சி.க்கு கட்-ஆஃப் மதிப்பெண் 184 என்றும் பி.சி. மாணவர்களுக்கு இருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு எம்.எஸ்சி. படிப்புகள் நல்ல மாற்றாக இருக்கும். நல்ல வேலைவாய்ப்புகளையும் தரும்.

SCROLL FOR NEXT