தமிழகம்

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

செய்திப்பிரிவு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்த ரகசிய அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணை கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது.

கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 29.3.2012 அன்று திருச்சி பாலக்கரையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை நடைபெற்று 5 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா, கடந்த 2014 டிசம்பரில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு பல்வேறு நீதிபதிகளிடம் இதுவரை 20 முறை விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் ஒவ்வொரு முறையும் விசாரணை தொடர்பாக ரகசிய அறிக்கையை தாக்கல் செய்து, குற்ற வாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் கைது செய்துவிடுவோம், கொலை குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது என பல்வேறு காரணங்களைக் கூறி அவகாசம் பெற்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் இதுவரை 12 ரகசிய அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பஷீர் அகமது முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடும்போது, “இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸா ருக்கு உயர் நீதிமன்றம் இரு முறை இறுதிக் கெடு விதித்தது. அதன் பிறகும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை.

சிபிஐ-யில் காவலர்கள் பற்றாக் குறை இருப்பதால், விசாரணையை மாற்ற வேண்டாம் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு வழக்கை நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றினால், அந்த வழக்கை விசாரிப்பதற்கு தேவையான காவலர்களையும், கட்டமைப்பு வசதிகளையும் வழங்க நீதிமன்றமே உத்தரவிடலாம். இதனால் சிபிஐ-க்கு விசாரணையை மாற்ற வேண்டும்” என்றார்.

அரசு வழக்கறிஞர் கந்தசாமி வாதிடும்போது, “ராமஜெயம் கொலைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன. குடும்பப் பிரச்சினை, தொழில் போட்டியில் கூட அவர் கொலை செய்யப்பட்டி ருக்கலாம். வழக்கமாக நண்பர்கள் புடைசூழ நடைப் பயிற்சிக்கு செல்லும் ராமஜெயம், கொலை நடைபெற்ற அன்று தனியாக நடைப் பயிற்சிக்கு சென்றுள்ளார். விசாரணைக்கு ராமஜெயம் குடும் பத்தினர் ஒத்துழைக்க மறுக் கின்றனர். யாரோ ஒருவரைக் குற்ற வாளியாக்கி வழக்கை முடிக்க நினைக்கவில்லை. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.

இதற்கு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆட்சேபம் தெரி வித்தார். அவர் கூறும்போது, “சிபிசிஐடி போலீஸாருக்கு ராம ஜெயத்தின் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற னர். போலீஸார் கேட்ட அனைத்து ஆவணங்களையும் அளித்துள்ள னர்” என்றார்.

விசாரணையின்போது குறுக் கிட்ட நீதிபதி, ‘‘சிபிசிஐடி போலீஸா ரின் ஒவ்வொரு விசாரணை அறிக் கையிலும், முந்தைய அறிக்கை யில் கூறப்பட்டிருந்ததை வார்த்தை மாறால் அப்படியே குறிப்பிட்டுள்ள னர்.

இறுதியாக கூடுதல் அவகாசம் கோரி ஒரு பாரா இணைக்கப்பட் டுள்ளது. அவ்வளவுதான். விசாரணை அறிக்கைகளைப் பார்க் கும்போது, விசாரணையில் முன் னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை” என்றார்.

பின்னர். வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT