தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதுடன், 77 மீனவர்கள் 102 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொய்வின்றி தெடர்கின்றன என்பதை தங்கள் கவனத்துக்கு மீண்டும் கொண்டுவருகிறேன். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடித்தளத்தில் இருந்து ஒரு இயந்திர படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களை கடந்த 15-ம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர்.
பாக்ஜல சந்தியில் தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடி உரிமையை பல காலமாக அனுபவித்து வரும் தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை அரசு பயமுறுத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களை கைதுசெய்வது, அவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்வதை இலங்கை கடற்படையினர் சமீபகாலமாக அதிகரித்துள்ளனர்.
இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லைக்கோடு தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். மேலும், கச்சத்தீவை வழங்கியது தொடர்பான, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான இந்தியா- இலங்கை இடையிலான 1974 மற்றும் 76ம் ஆண்டு ஒப்பந்தங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டுடன் இலங்கை உள்ளது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரமின்றி தமிழக மீனவர்கள் தற்போது மிகுந்த இன்னலுக்குள்ளாகியுள்ளனர். எனவே, இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம், அந்த அரசின் உயர்மட்ட தரப்பில் பேசி, மிகவும் ஆபத்தான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, இலங்கை அதிகாரிகளிடம் பேசி ஆழ்கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 77 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 102 படகுகளையும் எவ்வித தாமதமுமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறியுள்ளார்.