ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கட்டாயம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வரவிருக்கும் அவசர சட்டத்திற்கு, மத்திய அரசின் மூன்று துறைகளின் ஒப்புதல் பெற்றால் மட்டும் போதாது; இறுதியாக அது சட்ட அதிகாரம் பெற, குடியரசுத் தலைவரின் கையொப்பமும் கட்டாயம் தேவை.
இல்லாவிட்டால் இதை வைத்து, பிறகு சட்டச் சிக்கல் ஏற்படலாம்; எனவே, தமிழக அரசு உடனடியாக குடியரசுத் தலைவர் கையொப்பம் - ஒப்புதலைப் பெறுவதும் அவசரம் - அவசியம் என்று சில சட்ட நிபுணர்களின் கருத்தும் உள்ளதால், தமிழக அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
இல்லாவிட்டால் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போகக்கூடும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.