தமிழகம்

தஞ்சாவூர் சர்க்கரை ஆலையில் ரூ.2.35 கோடி மோசடி வழக்கில் அலுவலர் உட்பட 9 பேர் கைது

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகேயுள்ள குருங் குளம் அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.2.35 கோடி மோசடி செய்த வழக்கில், அலுவலர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆலையில் பல ஆண்டுகளாக, அலுவலர்கள், ஊழியர்கள், சில விவசாயிகள் கூட்டுசேர்ந்து, பல கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆலை நஷ்டத்தில் இயங்குவதாகவும், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி, விவசாய சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அமைத்த விசாரணைக் குழு விசாரித்து, 2010 முதல் 2015 வரை ஆலையில் ரூ.2.35 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக அறிக்கை அளித்தது.

விவசாயிகளின் கரும்பு வய லின் பரப்பு மற்றும் அவர்கள் கொண்டுவரும் கரும்பின் எடையை 2 மடங்காகப் பதிவு செய்தல், கரும்பு வெட்டுக்கூலி மற்றும் டிராக்டர் வாடகையை உயர்த்தி எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குற்ற வழக்கு பதிவு செய்யப் பட்டது. எனினும், 5 மாதங் களாக காவல் துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளவில்லை. குற்றம் சாட்டப் பட்டவர்களை கைது செய்து, மோசடி செய்த தொகையை பறிமுதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மேலாளர் தலைமறைவு

இந்நிலையில், மோசடி தொடர்பாக ஆலையின் கரும்பு உதவியாளர்கள் பி.குமரே சன்(46), எம்.ராஜசேகரன்(47), ஓய்வுபெற்ற கரும்பு உதவியாளர் எம்.சப்பாணி(61), ஓய்வுபெற்ற தலைமை கரும்பு அலுவலர் ஆர்.குணசேகரன்(63), பூச்சிக் கட்டுப்பாட்டு உதவியாளர் எஸ்.ராஜு(56), கரும்பு உதவியாளர் என்.அருட்செல்வம் (27), கணக்கு உதவியாளர்கள் எம்.கோவிந்தராஜ் (56), வி.நரசிம் மன்(57), கணினி தகவல் மேற் பார்வையாளர் பி.சீனிவாசன்(51) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ஆலை மேலாளர் சேகர் மற்றும் 2 விவசாயிகளை போலீஸார் தேடிவருகின்றனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள், விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் குறித்தும் விசாரணை நடைபெற்று வரு கிறது.

          
SCROLL FOR NEXT