தமிழகம்

ஜெயலலிதாவின் அரசு மக்கள் பலத்தைப் பெற்ற சிறந்த அரசு: முதல்வர் பழனிசாமி

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் அரசு மக்கள் பலத்தையும் கடவுளின் கருணையையும் பெற்ற சிறந்த அரசாகத் திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது உதகை மலர்க் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 145 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 5.76 கோடி கடன் உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய பிறகு பேசியதாவது:

''உதகமண்டலம் உலக அளவில் தலைசிறந்த சுற்றுலா மையம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1995-ம் ஆண்டு நூற்றாண்டு மலர்க்கண்காட்சியினை பிரம்மாண்டமாக நடத்தியதால் பெருமை பெற்ற நகரத்தில் இன்று நடைபெறும் 121வது மலர் கண்காட்சியினைத் துவக்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

இயற்கை எழில் கொஞ்சும் உதகை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இடம். மலைகளின் கம்பீரத்தையும், வளைந்தோடும் ஆறுகளின் அழகையும், மணக்கின்ற பூக்களின் வாசத்தோடும், சிற்றோடைகளையும் காணும் போது நமது களைப்பு மறைகிறது. கவலைகள் பறந்தோடுகிறது. மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது என ஜெயலலிதா உதகையில் பேசினார். அதே மகிழ்ச்சியை இங்கு வந்துள்ள அனைவருமே பெற்றுள்ளீர்கள் என்று நம்புகிறேன்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சியை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். நீலகிரி மலையை மலைகளின் அரசி என்று கூறுவர். ஆனால் இந்த அரசிக்கு யாருமே மகுடம் சூட்டவில்லை. ஆனால், ஜெயலலிதாதான் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களின் மூலம் இந்த மலையரசிக்கு மகுடம் சூட்டி பெருமைப்படுத்தினார்.

ஜெயலலிதாவின் பாதம் பட்ட பிறகுதான் நீலகிரி மலை வளர்ச்சியையும், மலர்ச்சியையும் பெற்றது. குறிப்பாக ஆசிய துணைக்கண்டத்திலேயே எங்குமில்லாத அற்புதமான 4000 ரகங்களைக் கொண்ட ரோஜா தோட்டத்தை இம்மாவட்டத்திற்கு வழங்கியவர் ஜெயலலிதா.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் உதகையில் எத்தனை வண்ணங்களில் மலர்கள் பூக்கின்றனவோ, அத்தனை வண்ணங்கள் அளவிற்கு விதவிதமான திட்டங்களை ஜெயலலிதா மக்களுக்கு தந்துள்ளார்.

பொதுமக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ அந்த வழிகளைப் பற்றியே நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஜெயலலிதா கூறுவார். அந்த வழியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

'கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதை விட கடவுளின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதுதான் எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது' என்று ஆப்ரகாம் லிங்கன் கூறுவார்.

எந்த அரசு மக்கள் பக்கம் இருக்கிறதோ, அந்த அரசின் பக்கம் மக்களும் இருப்பார்கள், கடவுளும் இருப்பார். எனவே, ஜெயலலிதாவின் அரசு மக்கள் பலத்தையும் கடவுளின் கருணையையும் பெற்ற சிறந்த அரசாகத் திகழ்கிறது.

உதகை பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தித் தரவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர், பொதுமக்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை கனிவோடு பரிசீலிக்கப்பட்டு, உதகை பேருந்து நிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்த ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT