தமிழகம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுக: வைகோ

செய்திப்பிரிவு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 80 கலைஅறிவியல் கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்து ஆறாயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரிகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டவையாகும்.

இப்பல்கலைக்கழகம், முன் எப்போதும் இல்லாத வகையில் அனைத்து நிலை மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை 84 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இளங்கலை, முதுகலை ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டண உயர்வை எதிர்த்து இம்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக வகுப்புகளைப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தி உள்ளனர். எனினும் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டண உயர்வை ரத்து செய்யவோ, குறைக்கவோ முயற்சி செய்யவில்லை.

தமிழகத்தில் கல்வி சதவிகிதத்தில் முதல்நிலை வகிக்கும் இப்பகுதியில் மாணவர்கள் மீது ஏற்றப்பட்டுள்ள கட்டணச் சுமை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியுள்ள தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பதோடு, தமிழக அரசு தலையிட்டு இக்கட்டண ரத்து செய்திட முன்வர வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT