தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேலமருத்துவக்குடி எருத்துகாரத் தெருவைச் சோ்ந்தவர் ராஜா(40). இவர், போர்வெல் அமைக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு தங்கம்(35) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, குடிபோதையில் வந்த ராஜா, மனைவி தங்கத்துடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர், ராஜா மண்ணெண்ணெயை தங்கம் மீது ஊற்றி, தீ வைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ராஜா மீதும் தீப்பற்றியது. இதில், பலத்த தீக்காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ராஜா நேற்று முன்தினம் இரவு இறந்தார். தங்கம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருநீலக்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.