தமிழகம்

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் மோதியது: மது போதையில் காரை ஓட்டியவர் மீது தாக்குதல்

செய்திப்பிரிவு

தேனாம்பேட்டையில் நடைபாதை மீது கார் ஏறியதில், அதில் தூங்கிக்கொண்டு இருந்த 2 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை தேனாம்பேட்டை விஜயராகவ சாலையைச் சேர்ந்தவர்கள் அண்ணாதுரை(53), சண்முகம்(50). இவர்கள் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு விஜயராகவ சாலையில் உள்ள நடைபாதையில் படுத்து தூங்கினர்.

இரவு 1 மணியளவில் தேனாம்பேட்டையில் இருந்து ஆயிரம் விளக்கு நோக்கிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது ஏறி நின்றது. இதில் அண்ணாதுரை, சண்முகம் இருவரும் காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர். காருக்குள் மது போதையில் இருந்த முத்து என்பவரை பிடித்து தாக்கினர்.

பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த அண்ணாதுரை, சண்முகம் ஆகியோரை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT