தமிழகம்

டாஸ்மாக்கால் குற்றங்கள் அதிகரிப்பு: சசிபெருமாள்

செய்திப்பிரிவு

காந்தியவாதியும் மது, போதை, ஊழலுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சசிபெருமாள், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முதல்கட்டமாக சென்னையில் உள்ள 36 டாஸ்மாக் கடைகளைத் தேர்ந்தெடுத்து அதன் முன்பு கடந்த 31-ம் தேதியிலிருந்து போராட்டம் நடத்திவருகிறார்.

அவரது போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்தது. சூளைமேடு பகுதியில் உள்ள பெரியார் பாதை டாஸ்மாக் கடை எண் 469 முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்கள் நோய் ஏற்பட்டு இறந்துவிடுகின்றனர். இதனால், பெண்கள் பலர் சிறு வயதிலேயே கணவனை இழந்து கஷ்டப்படுகின்றனர்.

மேலும் மது அருந்துபவர்களால் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சமுதாயப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல், டாஸ்மாக் கடைகளின் மூலம் வரும் வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்வது அரசுக்கு அவமானம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT