மதுரை அருகே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைக் கண்டித்தும் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இளைஞர்கள் காளைகளை அவிழ்த்துவிட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியில் நேற்று பெரும் பதற்றம் உருவானது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுப்பதற்காக 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வாடிவாசலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விழிப்புடன் காவல் இருந்தனர். காளை வளர்ப்போரை வீட்டுக் காவலில் வைத்திருந்தனர்.
அதேவேளையில், இளைஞர்கள், உள்ளூர் மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அவர்களுக்கு உதவிய ஊர் மக்கள் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி அளவில் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களாக, ஜல்லிக்கட்டுக்கான போராட்டக்களமாக மாறியுள்ள அலங்காநல்லூர் நிலவரம் இங்கே புகைப்படத் தொகுப்பாக: | படங்கள்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஜேம்ஸ் |