தமிழகம்

தமிழக மக்களின் விருப்பம்போல் நிலையான ஆட்சி அமையும்: வெங்கய்ய நாயுடு

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிவிட்டது. தமிழக மக்களின் விருப்பத்துக்கேற்ப நிலையான ஆட்சி அமைய இன்னும் நேரம் தேவை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்? ஆளுநரின் முடிவு என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், "சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. தமிழக மக்களின் விருப்பத்திற்கேற்ப நிலையான ஆட்சி அமைய இன்னும் நேரம் தேவைப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT